Friday, March 16, 2012

தமிழ் எண்கள்


    ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு சிறப்புண்டு அதே போல் நம் தாய் தமிழ் மொழிக்கும் பல சிறப்புகள் உண்டு. நாம் 1 2 3 4 5 6 7 8 9 0, ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து ஆறு ஏழு எட்டு ஒன்பது, இவற்றை சிறு வயது முதல் பயின்று பயன் படுத்தி வருகின்றோம், ஆனால் நம் புழக்கத்தில் கொண்டிருக்கும் எண் வடிவமானது நம் தமிழ் மொழிக்குரியதா ? என்றால் நமக்கு அதற்க்கான பதில் தெரியாது. முதலில் நம் மொழியில் எண்ணிற்க்கு வடிவம் இருகின்றதா என்றே நமக்கு  தெரியாது.  ஆனால் தமிழில் எண்களுக்கு வடிவம் உண்டு இது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? இனி தெரிந்துக்கொல்வோம் .



 


 ஒவ்வொரு மொழியும் தனக்கென தனி எண் வடிவங்களை கொண்டுள்ளது அவற்றை ஆராய்ந்தால் அதனை பற்றிய விவரங்கள் தெரியவரும். மேலே உள்ளவை தமிழ் எண்களின் வடிவமாகும். ஆனால் நாம் இன்று இவ்வடிவத்தை பயன் படுத்துவது இல்லை.
 


    தமிழில் பூஜியத்தை பயன் படுத்தவில்லை. 150 = நூற்றி ஐம்பது என்று கூறுவோமே தவிர ஒன்று பூஜ்யம் ஐந்து என்று கூற மாட்டோம். ஆகையால் தானோ தமிழில் பூஜியத்திற்க்கு முக்கியத்தும் கொடுக்கவில்லையோ என்ற விவரம் இன்றும் நமக்கு புலப்படவில்லை. ஆனால் பூஜியத்திற்க்கான வடிவத்தை தமிழ் ஆண்டு குறிப்பேடுகளில் உபயோக படுத்தி உள்ளனர்.


தமிழ் இலக்கண படிவத்திலும் பூஜியத்தை உபயோக படுத்தி உள்ளனர்.
 
 
  நாம் தமிழில் ஒன்று, பத்து, நூறு, ஆயிரம் என்று வாக்கியமாக கூறிவருகிறோம் ஆனால் அவற்றிற்கும் தனி சிறப்பு பெயர்கள் உண்டு அவற்றை கீழே காணுங்கள்.


   நாம் இப்போ கண்ட என் வடிவமும் வளர்ச்சியின் மாறுதலால் மாற்றம் அடைந்துள்ளது.கல்வெட்டுகளில் போதிக்கப்பட்ட எண்களுக்கான வடிவமும் வளர்ச்சியில் மாற்றம் கண்டுள்ளது.
 


கீழ் வருவன தமிழ் எண்களுக்கான தமிழ் வடிவமாகும்.

 

  எண்களுக்கும் தமிழிலும் வடிவம் உண்டு என்பதை நாம் அறிய வேண்டும். தமிழ் மொழிக்கான பல அறிய சிறப்புகள் புதைந்து உள்ளன அவற்றை தோண்டி எடுத்தால் நம் மொழியின் பெருமையை இவ்வுலகம் அறியும். நாம் இவ்வடிவத்தை இன்று பயன் படுத்தாமல் இருப்பதற்க்கு இவை நம்  மொழியினத்தாரை தவிர மற்றவரால் உணர முடியாது என்பது ஆகும், மேலும் நாம் இன்று கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி போன்ற எல்லா துறையிலும்  உலகளவில் தலை நிமிர்ந்து நிற்க்கின்றோம் இந்நிலையில் இவ்வடிவத்தை நாம் பயன் படுத்துவது சரியாக இருக்காது. அதற்காக நாம் அவற்றை மறந்து விட கூடாது. நம் தமிழ் மொழியில் எண்ணிற்க்கு வடிவம் இருப்பது போல் மற்ற மொழிகளிலும் வடிவம் உண்டு.


   

Monday, March 12, 2012

உங்களை, உங்களுக்கே உணர்த்தும்

'நாற்பது வயதில் நீங்கள் இருபதாகலாம்... அறுபது வயதில் நாற்பதாகலாம்!'

  வாழ்வியல் பயிலரங்கங்களை நடத்த அவ்வப்போது நான் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டியிருக்கும். ஒவ்வொருமுறை செல்லும்போதும் புதுப் புது அனுபவங்கள் கிடைக்கும்.

  சிங்கப்பூர், ஜப்பான் போன்ற கிழக்கத்திய நாடுகளில்... ஏராளமான அனுபவ அறிவு தேவைப்படும் பதவிகளில் எல்லாம் வெறும் இருபது, இருபத்தி இரண்டு வயது பெண்கள் வீற்றிருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறேன். 'எப்படி...?!' என்று நான் வியந்தபோதுதான், என் மாணவன் ஒருவன் எனக்கு அந்த நாடுகளில் நிலவும் நிதர்சனத்தை விளக்கினான்.

  "சுவாமி... இவர்கள் எல்லாம் பார்க்கத்தான் இருபது, இருபத்தி ஐந்து வயது பெண்கள் போல இருக்கிறார்கள். ஆனால், நிஜத்தில் அதைவிட இருமடங்கு வயது கொண்டவர்கள்!" என்றான். நம்புவதற்கு நான் சிரமப்படுவதைப் பார்த்த மாணவனே தொடர்ந்தான்.

  "சுவாமி... இந்தியாவில் திருமணம், நிச்சயதார்த்தம் போன்ற சுபகாரியங்களுக்குச் செல்லும் பெண்கள் நல்ல நகை நட்டோடு, பாந்தமாக பட்டுப்புடவை அணிந்து போவதை எப்படி முக்கியமாக நினைக்கிறார்களோ, அதேபோல அலுவலகத்துக்கு நல்ல கச்சிதமான உடலமைப்போடு போக வேண்டும் என்பதை இந்த நாட்டுப் பெண்கள் முக்கியமானதாகக் கருதுகிறார்கள். குழந்தை பெற்று சற்றே சதை போட்டுவிடும் பெண்கள்கூட பேறுகாலம் முடிந்து மீண்டும் அலுவலகம் போக முடிவெடுத்தால், சுமார் இரண்டு மாத காலம் உடற்பயிற்சிக் கூடத்துக்கு சென்று உடம்பை கச்சிதமாக மாற்றிக் கொண்டுதான் அலுவலகம் செல்கிறார்கள்" என்றான்.

  நான் என் இந்த அனுபவத்தை என் இந்திய மாணவர்களிடம் பகிர்ந்துகொண்டு, " 'உடற்பயிற்சியால் நாற்பது வயது பெண்கள் எல்லாம் இருபது வயது பெண்கள் போல தோற்றமளிக்க முடியும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், இவர்களின் உற்சாகம், துறுதுறுப்பு, வேலையில் குதூகலம் என்று... அனைத்திலும் இருபது வயது பெண்கள் போல சுறுசுறுப்போடு எப்படி நடந்து கொள்ள முடிகிறது?!'

  - இதுதானே உங்களின் கேள்வி? இது மிகவும் சுலபம். நினைத்தால்... மனதளவில் உங்களால்கூட உங்கள் வயதை பாதியாகக் குறைத்துக் கொண்டு உற்சாகத்தை இரண்டு மடங்கு கூட்ட முடியும்" என்றேன்.

  ஒரு பெண்மணி, "சுவாமி... நீங்கள் சொல்வது கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், நடைமுறையில் எல்லாமே தலைகீழாக இருக்கிறதே?! திருமணமான புதிதில் என் கணவரின் கவனம் முழுக்க முழுக்க என் மீது இருந்தது. எனக்கு அப்போது மகிழ்ச்சியாக இருந்தது. பேறுகாலத்திலும் குழந்தைகள் பிறந்து, தவழ்ந்து, வளர்ந்த பருவங்களிலும் என் கவனம் முழுக்க அவர்கள் மீது இருந்தது. அப்போதும் மகிழ்ச்சிக்கு குறைவில்லை. ஆனால், இப்போதோ குழந்தைகள் பெரியவர்களாகி வேலை கிடைத்து திருமணம் நடந்து வேறு ஊர்களுக்குச் சென்றுவிட்டார்கள். இப்போது வாழ்க்கையில் வெறுமை தான் மிஞ்சியிருக்கிறது."

  இப்படிப் பேசிய பெண்மணிக்கு நாற்பத்தி ஐந்து வயதுதான் இருக்கும். அதற்குள் அவருக்கு வாழ்க்கையில் அனைத்தும் முடிந்துவிட்டதைப் போல ஓர் உணர்வு.

  ஆனால், சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளில் இருக்கும் பெண்மணிகள் ஒருபோதும் இப்படி நினைப்பதில்லை. அவ்வளவு ஏன்... மறைந்த நமது பிரதமர் இந்திரா காந்தியையே எடுத்துக் கொள்ளுங்கள். அவர் பேரன், பேத்தியெல்லாம் எடுத்தவர்தான். அந்த அந்தஸ்தை அவர் மகிழ்ச்சியாக அனுபவித்தார். பேரன், பேத்திகளோடு எல்லாம் விளையாடினார். ஆனால், வேலை என்று வரும்போது அவர் தன்னை பாட்டியாக கற்பனை செய்து கொண்டதுகூட இல்லை. ஆம்... உலகம் எப்போதுமே அவரை ஒரு இரும்பு மனுஷியாகத்தான் பார்த்திருக்கிறதே ஒழிய, ஒருபோதும் பாட்டியாகப் பார்த்ததே இல்லை. காரணம்... வயது என்பது உடம்பைவிட மிக அதிகமாக மனதோடும், செயல்பாட்டோடும் சம்பந்தப்பட்டது.

  அமெரிக்கா போன்ற பிரதேசங்களில் வாழும் 'வல்ச்சர்' என்று சொல்லப்படும் பருந்துகளைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். டிஸ்கவரி சேனலே இப்போது தமிழில் வருவதால் அதில்கூட நான் சொல்லும் செய்தியை நீங்கள் பார்க்கக்கூடும். அந்த பருந்துகளுக்குப் பொதுவாக நாற்பது வயது வரைதான் ஆயுள். அந்த வயதை எட்டிப்பிடிக்கும் போதே எலி, பாம்பு மாதிரியான இரைகளை வேட்டையாடிப் பிடிக்க முடியாத அளவுக்கு அதன் அலகுகள் மழமழவென்று மழுங்கி போய்விடும். கால் விரல்களில் இருக்கும் நகங்களும் கூர்மையை இழந்துவிடும். அதனால் இந்தப் பருவத்தில் ஒரு சில பருந்துகள் உணவின்றி இறந்துபோய்விடும். ஆனால், அவற்றில் அதீத மனத்தின்மை வாய்ந்த பருந்துகளோ... தங்களின் முயற்சியால் கூடுதலாக முப்பது வருட வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ளும்!

  ஆச்சர்யமாக இருக்கிறதா..? ஆனால், அது உண்மைதான்! இந்தப் பருந்துகள், நாற்பது வயதான பருவத்தில் ஆளரவமற்ற ஏகாந்தமான மலைப்பிரதேசங்களுக்குச் சென்று பெரும் மறுமலர்ச்சிக்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும். இந்தக் காலத்தில் அவை மலைகளில் தன் அலகுகளை மோதி உடைத்துக் கொள்வதுடன், புதிதாக அலகு முளைக்கும் வரை அந்த மலைகளிலேயே தங்கியிருக்கும். அதேபோல கூர்மை இழந்த தங்களது கால் நகங்களை அவை பிடுங்கிப் போட்டுவிட்டு, புதிய நகங்கள் வளரும் வரை காத்திருக்கும். புதிய அலகும் கால் நகங்களும் வளர்ந்த பின்னர், மீண்டும் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பி... மேலும் முப்பது ஆண்டு காலம் வாழும்!

  இந்தப் பருந்துகளைப் போல நாம் நம்மை புதுப்பித்துக் கொள்ள முடியுமா? நிச்சயம் முடியும். உங்கள் இளமைப் பருவத்தில் நீங்கள் ஆசைப்பட்டு நிறைவேறாத விஷயங்கள் என்னென்ன என்று பட்டியலிட்டுப் பாருங்கள். நீங்கள் படிக்க விரும்பிய புத்தகங்களை எல்லாம் அனுபவித்து படித்து ரசியுங்கள். 'வீணை கற்றுக் கொள்ள வேண்டும்', 'இந்தி கற்றுக் கொள்ள வேண்டும்' 'தெலுங்கு கீர்த்தனைகளைக் கற்றுக் கொள்ள வேண்டும்!' என்று ஆளாளுக்கு ஆயிரமாயிரம் நிறைவேறாத ஆசைகள் மனசுக்குள் அடங்கிக் கிடக்கும். உங்களின் வயது என்னவானாலும் அதை இப்போது நீங்கள் கற்றுக் கொள்ளலாம்.

  'குழந்தை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளிக்குதித்து விளையாடுகிற மாதிரி...' என்று யாராவது உங்களைப் பரிகாசம் செய்ய முற்பட்டால்... அதையெல்லாம் காதிலேயே வாங்காதீர்கள். எனக்குத் தெரிந்த பல பெண்மணிகள் நாற்பத்தைந்து வயதுக்கு மேல்தான் ஸ்கூட்டி ஓட்டவே கற்றுக் கொண்டிருக்கிறார்கள். வெளிநாடுகளில் இருக்கும் தங்கள் பேரன், பேத்திகளோடு பேச அறுபது வயதுக்கு மேல் கம்ப்யூட்டரை இயக்க கற்றுக் கொண்ட பலரை உங்களுக்கே தெரிந்திருக்கும். புதிய விஷயத்தை நீங்கள் கற்றுக் கொள்ளும் போது... உங்கள் மனதுக்குள் உற்சாக அலை அடிப்பதை உங்களால் நிச்சயம் உணர முடியும்!

பின் நாற்பதிலும் நீங்கள் இருபது; அறுபதிலும் நாற்பது!

சுவாமி சுகபோதானந்தா தொகுப்பலிருந்து.

Thursday, March 1, 2012

குற்றம் கண்டுபிடிக்கும் குணம்


   எதற்கெடுத்தாலும் குற்றம் கண்டுபிடிக்கும் குணம் நம்மில் பலருக்கு இருக்கிறது. அடுத்தவர் செய்யும் குற்றங்களைக் கண்டுபிடிப்பதில் அப்படியொரு அலாதியான சந்தோஷம். இப்படிக் குற்றம் கண்டுபிடிப்பதையே வழக்கமாக வைத்துக் கொண்டிருந்தால் நாளடைவில் அது போதை வஸ்து மாதிரி ஆகி, நமது அறிவுப் பார்வையை குறுகலாக்கிவிடும்.

   தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் பைனான்ஸ் மானேஜர் ஒருவர் நடந்து போய்க் கொண்டிருந்தபோது திறந்திருந்த டிரெயினேஜ் பள்ளத்துக்குள் விழுந்துவிட்டார். குடலைப் புரட்டி எடுக்கும் சாக்கடை நீரில் கழுத்துவரை மூழ்கிய நிலையில் அவர் தத்தளித்துக் கொண்டிருந்தபோது, அந்தப் பக்கமாக அவரது அலுவலகத்தில் பணிபுரியும் மார்க்கெட்டிங் எக்ஸிகியூடிவ் வந்தார்.
பைனான்ஸ் மானேஜர்னா கணக்கைத் தவிர வேற எந்த விஷயமும் தெரியாதுனு சொல்வாங்க. அதுக்காகக் கண்ணுகூடவா தெரியாது? என்று மானேஜர் மீதிருந்த தனது காழ்ப்பு உணர்ச்சியைக் கொட்டிவிட்டு, நடையைக் கட்டினார் அவர்.

   அடுத்ததாக மானேஜரின் பக்கத்து வீட்டுக்காரர் வந்தார். என்ன சார்... இந்தப் பள்ளத்துக்கு முன்னால கொட்டையா சிவப்பு எழுத்தில் 'ஜாக்கிரதை'னு பலகை வெச்சிருக்கே! அதைப் பார்க்கலையா? ஹும்... நீங்கள்லாம் மானேஜர் உத்தியோகம் பார்த்து என்னத்தைப் பெரிசா கிழிக்கப் போறீங்களோ? என்று சலித்துக்கொண்டே ஒரு கையால் தன் மூக்கை மூடிக்கொண்டு, இன்னொரு கையை சாக்கடைப் பள்ளத்தில் கிடக்கும் மானேஜரை நோக்கி நீட்டினார்.
ஆனால், மானேஜரைத் தொட முடியாத அளவுக்கு அந்தப் பள்ளம் மிகவும் ஆழமாக இருந்தது. வேறு வழியின்றி அவரும் அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டார்.

   அடுத்ததாக, அந்தப் பக்கம் மானேஜரின் நெடுநாளைய நண்பர் வந்தார். கழிவுநீர்ப் பள்ளத்தில் மானேஜர் விழுந்து கிடப்பதைப் பார்த்து பதைபதைத்த அவர், தனது சட்டையைக்கூடக் கழற்றாமல் அந்தச் சாக்கடைக்குள் குதித்தார். இந்தா, என் தோள்மீது ஏறி, முதலில் நீ வெளியே போ! என்று மானேஜரை அந்தச் சாக்கடையிலிருந்து வெளியேற்றினார்.

   இந்தக் கதையில் வரும் மார்க்கெட்டிங் எக்ஸிகியூடிவ் மாதிரியோ அல்லது பக்கத்து வீட்டுக்காரர் மாதிரியோ, அடுத்தவர்களிடம் குறை காணும் நபர்களாகத்தான் நம்மில் பலர் இருக்கிறோம் என்பது கசப்பான உண்மை.

   கணவனும் மனைவியும் ஒருவர்மீது ஒருவர் குறை கண்டுபிடிக்காமல் வாழவேண்டும். தன் மனைவி குறையே இல்லாத முழுமையான மனைவியாக இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்காதவர் யாரோ, அவர்தான் உண்மையில் குறையே இல்லாத முழுமையான கணவன்.

   என்ன சுவாமி சொல்கிறீர்கள்? என் வீட்டுக்கு வந்து பாருங்கள். கட்டில், நாற்காலி, சோபா, தையல் மெஷின் என்று எல்லா இடத்திலும் அழுக்குத் துணியாக இறைத்து வைத்திருக்கிறாள். ஒரு வாரத்துக்கு முன்னால் வைத்த வத்தல் குழம்பு, இரண்டு வாரத்துக்குமுன் வைத்த ரசம் என்று பிரிஜ்ஜே நாறிக் கொண்டிருக்கிறது. இந்தக் குற்றங்களை எல்லாம் அவளுக்கு நான் எடுத்துச் சொல்லக்கூடாதா? என்று சிலர் கேட்கக்கூடும்.

   தாராளமாகச் சொல்லுங்கள். ஆனால், அதற்குமுன் மிகச் சிறந்த புத்திமதி எது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ஆயிரம் வார்த்தைகளில் புத்திமதி சொல்வதைவிட, முன்உதாரணமாக நாமே வாழ்ந்து காட்டுவதுதான் மிகச் சிறந்த புத்திமதி!

   நான் சொல்வதை நம்புவதற்குச் சிரமமாகஇருந்தால், இந்த விளையாட்டை உங்கள் குழந்தையிடம் விளையாடிப் பாருங்கள்.

   ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு... என்று வரிசையாகச் சொல்வேன். நான் ஏழு என்று சொல்லும்போது நீ கைதட்ட வேண்டும். சரியா?என்று கேட்டுவிட்டு, ஒன்று இரண்டு, மூன்று... என எண்ணத் தொடங்குங்கள். ஆறு என்று சொல்லும்போதே, நீங்கள் திடீரெனக் கைதட்டிப் பாருங்களேன். குழந்தையும் சட்டென்று கை தட்டிவிடும்.

இதிலிருந்து தெரிவது என்ன?

   குழந்தைகள் நாம் சொல்வதைப் பின்பற்றுவதில்லை. நாம் செய்வதைத் தான் பின்பற்றுகின்றன. குழந்தைகள் மட்டுமில்லை, பெரியவர்களும் இப்படித்தான்.
அடுத்தவர்களுக்காக இல்லாவிட்டாலும் சுயநலமான காரணத்துக்காவது அடுத்தவர்மீது குற்றம் காண்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

   சரி சுவாமி, நம் குழந்தையே ஒரு தப்பு செய்கிறது. அல்லது அலுவலகத்தில் நமக்குக் கீழே வேலை செய்பவர் ஒரு தப்பு செய்கிறார். அடுத்த வீட்டுக்காரன் குப்பையை எடுத்து வந்து நம் வாசலில் கொட்டுகிறான். யாரிடமும் குற்றம் கண்டுபிடிக்கக்கூடாது என்று அப்போதும் வாய்மூடி மௌனியாக இருந்துவிட வேண்டியதுதானா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

   ஒருவர் செய்யும் தவறுகளை, அவருக்கு உணர்த்தக்கூடாது என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால், அதை அவரே ரசிக்கும்படி சுட்டிக் காட்டலாம்.
ஒரு முறை யார் அழகு என்று ஸ்ரீதேவிக்கும் மூதேவிக்கும் சர்ச்சை உண்டாகி விட்டது. தீர்வு சொல்லும் படி இருவரும் நாரதரை அணுகினார்கள். நாரதரோ நிஜமாகவே சிக்கலில் மாட்டிக்கொண்டு விட்டார்!

  ஸ்ரீதேவியாகிய லட்சுமி தான் அழகு என்றால், மூதேவிக்குக் கோபம் வந்து தன் வீட்டிலேயே தங்கிவிடுவாள். மூதேவிதான் அழகு என்றால், ஸ்ரீதேவி கோபித்துகொண்டு தன் வீட்டைவிட்டு வெளியேறி விடுவாள். என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த நாரதர், யோசிப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்ளும் விதமாக, எங்கே... சற்று முன்னும் பின்னுமாக நடந்து காட்டுங்கள் என்றார்.
ஸ்ரீதேவியும் மூதேவியும் நாரதர் முன் கேட்வாக் நடை நடந்தார்கள். சட்டென நாரதர், "ஸ்ரீதேவி வரும்போது அழகு. மூதேவி போகும் போது அழகு!" என்று சொல்ல... இரு தேவிகளுக்குமே பூரிப்பு!

அங்கே ஜெயித்தது ஸ்ரீதேவியுமல்ல, மூதேவியுமல்ல... நாரதர்தான்!

சுவாமி சுகபோதானந்தா தொகுப்பலிருந்து.