Wednesday, February 29, 2012

காதல் விதை

விடியலில் விதைத்தேன் விதையை

துயிலெழுந்து பார்த்தேன் துளிர்விட்டிருந்தது

மாலையில் பார்த்தேன் மரமாயிருந்தது

அசந்த நேரம் அடித்தது ஜாதிப்புயல்

வீழ்ந்தது வேருடன் காதல் மரம்.
 

Monday, February 27, 2012

வாழ்கை

   என் தாத்தா மைசூர் மகாராஜாவின் அரண்மனையில் பணியாற்றியவர். அவருடைய முக்கிய வேலை ராஜா வேட்டையாட காட்டுக்கு செல்லும்போது அவருடன் செல்வது. வேட்டையாடுவதில் என் தாத்தா திறமையானவர். அவர் கொடிய காட்டு மிருகங்களையும் சர்வசாதாரணமாக வேட்டையாடுவார் என்று சொல்வார்கள்.

தாத்தாவிடம்  என் கேள்வி.

   தாத்தா... கும்மிருட்டாக இருக்கும்போது காட்டிற்குள் வேட்டையாட போகிறீர்களே, உங்களுக்கு பயமாக இருக்காதா ? என்று சிறுவனாக இருந்த நான் அவரிடம் ஒருமுறை கேட்டேன்.

தாத்தாவின் பதில்.

   அடே பையா!... வேட்டைக்கு போவதே அந்த பயம் கலந்த கிளர்ச்சியான உணர்வுக்காகதானே. என்று சொல்லி சிரித்தார்.

   ஆமாம்... வேட்டையாட காட்டுக்கு செல்வது அவருக்கு மகிழ்ச்சியூட்டும் ஒரு பொழுதுபோக்காகத்தான் இருந்திருக்கிறது. காடு என்பது ஒரு பயங்கரமான பிரதேசம் எந்த திசையிலிருந்து எந்த மிருகம் நம் மீது பாயுமோ? என்று கூட தெரியாது. காட்டுக்குள் வேட்டையாட செல்வது ஒரு திகிலான விஷயம் தான். என்றாலும் ஏன் வேட்டையாட போகிறீர்கள்?

   எதிர்பாராத விஷயங்களை எதிர்கொள்வதில் மனிதனுக்கு எப்போதும் ஓர் அலாதியான இன்பம் உண்டு. மகாராஜா தன் ஆட்களை அனுப்பி ஒரு புலியையோ அல்லது ஒரு சிங்கத்தையோ பிடித்து வர சொல்லி அதை மரத்தில் கட்டி வைத்து அம்பு எய்து கொள்ளமுடியும். ஆனால் அதில் என்ன சந்தோஷம், திகிலுணர்வு இருக்கிறது. "அய்யோ!... என் ஆருயிர் நண்பன் இப்படி என்னை ஏமாற்றுவான் என்று கனவிலும் நினைத்தது இல்லையே!", "செழிப்பாக ஓடும் என்று நினைத்து தொடங்கிய வியாபாரம் இப்படி ஒரேயடியாக படுத்துவிட்டதே!", "என் உயிர் காதலி என்னை ஏமாற்றிவிட்டு சென்றுவிட்டாலே!" என்று வருத்தப்பட்டு புலம்புவதில் எந்த அர்த்தமும் இல்லை.

   வேட்டைக்கு செல்லும்போது, "இந்த புலி நான் ஏமார்ந்தபோது என் மீது பாய்ந்துவிட்டது, இது நீதி இல்லை" என்று சொல்லி நாம் புலம்பியதுண்டா?

   வாழ்கையை ஒரு வேட்டையாக நினைத்துக்கொள்ளுங்கள், போராட்ட உத்வேகமும் புதிய உற்சாகம் பிறக்கும். ஆனந்தம் பிரவாகம் எடுக்கும்.

-சுவாமி சுகபோதானந்தா  


Tuesday, February 21, 2012

கோலங்கள்


 
   நம் மக்கள் ஒரு காரியத்தை காரணம் இல்லாமல் செய்யமாட்டார்கள், எனினும் நாம் ஒரு செயலை செய்தால், அதை நாம் யோசிப்பது இல்லை, ஏன் செய்கிறோம்?, எதற்காக செய்கிறோம்?, என்று சிந்தித்தால் அதற்கான விடை வெளிப்படும். நாம் அன்றாட செய்யும் பல விசயங்களிலேயே பல அறிய காரணங்கள் அடங்கி உள்ளன, ஆனால் நாம் அதை தெரிந்துக்கொள்ள முயல்வது இல்லை. இதனால் நம் நாகரிகம் பல மாறுதல்களை கண்டுள்ளது.

    நாம் கோலத்தை பார்த்திருப்போம், பெண்கள் அதை போட்டும் இருப்பார்கள் ஆனால் கோலம் போடுவதன் காரணத்தை யாரும் அறிந்திலர். இப்போது கோலம் போடுவதன் காரணத்தை அறிவோம்.

  விடியற்காலையில் சூரியன் விளிப்பதற்கு முன்னதாகவே நம் வீட்டு பெண்கள் விழித்து வாசலை சுத்தப்படுத்தி மாட்டு சாணத்தை தெளித்து கோலம் போடுவார்கள், மாலையிலும் கோலம் போடுவார்கள்  இது நம் பண்பாட்டிற்குரியது இன்றும் நாம் பின்பற்றி வருகின்றோம். பூக்கள் இருக்க இணைத்து கட்டுவது போல, தெருக்களில் வீடுகள் இணைத்து  கட்டப்பட்டு இருக்கும். அவ்வீடுகளின் வாசலில் போடப்பட்டு இருக்கும் கோலம் நடக்க வழி இல்லாமல் தெருவையே மறைத்து, பார்பதற்கு ஒரு அழகான காட்சியை நமக்கு அளிக்கும்.

ஆனால் அந்த கோலத்தை ஏன் போடுகிறோம்?, எதற்காக போடுகிறோம் என்று நமக்கு தெரிந்திருக்க இயலாது. இனி அதை தெரிந்துக்கொள்வோம்.

    பெண்கள் போடும் கோலங்கள் பார்த்து ரசிக்க கூடிய கோடுகள் அல்ல, ஒவ்வொரு கோலத்திற்கும் பல அறிய அர்த்தங்கள் மறைந்து இருக்கின்றன. பெண்கள் பொதுவாக புள்ளி வைக்காமல் கோலத்தை போட விரும்புவது இல்லை, கோலம் என்பது கோடுகளால் போடும் ஒரு வரைபடம் தானே, கற்பனைக்கு தகுந்தவாறு சுதந்திரமாக சித்திரங்களை தீட்டலாமே  எதற்கு புள்ளிகள் என்று நாம் சிந்திக்கலாம். ஆனால் அந்த புள்ளிகள் சுதந்திரத்தை தடை செய்யும் முற்று புள்ளிகள் அல்ல, நாம் நம் வாழ்க்கை எப்படி வேண்டுமென்றாலும்  வாழலாம், என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம், சந்தோசம் மட்டும் தான் முக்கியமென்று நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ஆனால் அது வாழ்க்கை அல்ல, அது மிருக வாழ்க்கையாகும். வாழ்க்கைக்கு ஒரு நெறிமுறை ஒழுக்கம் என்பது வேண்டும் அப்போதுதான் அது வாழ்க்கையாக இருக்கும்.

  ஒழுக்கம் என்பது எப்படி ஒரு மனிதனின் வாழ்க்கையை நிர்னையிக்கிறதோ அதே போலத்தான் புள்ளிகளும் கோலத்தை அர்த்தமுடையதாக வைத்திருக்கின்றன. புள்ளிகள் கோலத்தின் கோடுகளை தாறுமாறாக வளரவிடாது நெறிப்படுத்தி ஒரு முழுமையான வடிவமாக்கி ஒரு உருவம் தருகின்றன. புள்ளிகளை மீறிய கோடுகள் அலங்கோலங்கலாகும். புள்ளிகள் என்பது ஒழுக்கத்தின் மறுவடிவம் நம் மக்கள் எதை சொல்ல வந்தாலும் ஒழுக்கத்தை மையப்படுத்தி சொல்வார்களே தவிர அதற்கு மாறாக எதையும் சொல்ல மாட்டார்கள், காரணம் இந்த பிரபஞ்சமானது ஒரு வித ஒழுக்கத்தில் தான் அதாவது ஒரு கட்டுபாட்டில் தான் கால காலமாக நெறி தவறாமல் இயங்கி வருகிறது. வானத்தில் இருக்கின்ற எதோ ஒரு கிரகம் தனக்கென்று உள்ள நெறியை அதாவது சுற்று பாதையை விட்டு தாறுமாறாக இயங்குகிறது என்று வைத்து கொள்வோம் அது மற்ற கிரகத்தின் மீது மோதி அந்த கிரகத்தை அழிப்பதோடு மட்டுமல்ல தன்னையும் அழித்து கொள்ளும் எனவே ஒழுக்கம் மற்றும் நெறி என்பது இயற்கை வகுத்த விதி அந்த விதியை மீறுகின்ற போது அழிவு தான் நேரிடும் என்ற உண்மையை நாம் அறிய வேண்டும்.

  எனவே தான் நெறிப்பட்ட வாழ்க்கையை வலியுறுத்தி சொல்ல வந்த  தங்களது புறசெயலில் கூட ஒழுங்கு படுத்தப்பட்ட நெறிமுறைகளை வலியுறுத்தினார்கள் நம் மக்கள் அதன் அடையாளம்  தான் புள்ளிகளுக்குள் கட்டுப்பட்ட கோலம் என்பது. இன்று வீடுகளின் முன்னால் கோலங்களை பார்ப்பது அரிதாகி விட்டது அதனால் தான் மனிதனின் வாழ்க்கையில் ஒழுக்கம் என்பதும் அரிதாகி சிறிது சிறிதாக குறைந்து கொண்டே வருகிறது.

    கோலத்தில் வைக்கின்ற புள்ளிகளுக்கே இத்தனை காரணம் என்றால், கோலம் போட பயன்படுத்தும் பொருட்களில் எத்தனை காரணங்கள் மறைந்திருக்க கூடும். அரிசி மாவில் போடுகின்ற கோலம் சம்பிரதாய பழக்கம் மட்டுமல்ல சகல உயிர்களையும் தன்னுயிர் போல் பாவித்து அவைகளுக்கும் உணவளிக்கும் உயர்ந்த தானமாக கருதப்பட்டு வருகின்றது.  உணவுக்கே அரிசி இல்லாத மனிதன் கோலம் போட அரிசிக்கு எங்கே போவான் அதனால் மாக்கோலத்தை வலியுறுத்தி, மண்ணால்  கோலத்தை போடுகின்றனர்.
 
 அரிசியை தவிர்த்து மண்ணால் போடுகின்ற கோலத்திற்கு கூட காரணம்  இருக்கிறது. பால், பழம், மாமிசம் போன்ற உணவுகளை உண்டு வளருகின்ற இந்த உடம்பு ஒரு நாள் மண்ணோடு மண்ணாக போகப்போகிறது அதனால் தினசரி காலை நேரம் கோலம் போட அந்த மண்ணை தொடுகின்ற பெண் நானும் ஒரு நாள் இப்படி தான் ஆவேன் என்று வாழ்வின் நிலையாமையை யோசித்தாள் என்றால் அவளுக்கு பேராசை என்பது எப்படி வரும்? என்ற கருத்து சொல்லப்படுகின்றது.


   வண்ணங்களை தவிர்த்து மாவாலும் மண்ணாலும் கோலங்களை போடுவோம். வண்ணக்கோலம் மட்டுமே அழகானவை என்பது இல்லை. மாவாலும், மண்ணாலும் போடப்படும் கோலங்கள் தான் உண்மையான அழகை வெளிப்படுத்துகின்றன.

Thursday, February 16, 2012

பறிதவிப்பு

அன்று !
பேசிக்கொண்டிருந்தேன் அவளிடம்

இன்று !
புலம்பிக்கொண்டிருகிறேன் அவளின்றி

பைத்தியமானேன் பலர் பார்வையில்
பறிதாபமற்று போனேன்
பறிதவித்தேன்

காதலை பறித்தவள் உயிரை பரிக்காதது ஏனோ?
கசிந்தது கண்ணீர், இறந்தது இதயம்,
சென்றது உயிர் அவளைத்தேடி
ஏமாற்றத்துடன்...

Wednesday, February 15, 2012

பழந்தமிழர் விளையாட்டுக்கள்

 விளையாட்டு என்றவுடன் மட்டைப்பந்து, உதைப்பந்து ஆகியவைதான் நம் நினைவுக்கு வருகிறது. ஏனென்றால் அவ்விளையாட்டுகளில் தான் பணம் கிடைக்கிறது. நம் நாட்டில் உண்மையான திறமைக்கு மதிப்பு இருக்கிறதா? என்றால் நிட்சயம் இல்லை என்று தான் கூறவேண்டும்.

 விளையாட்டு என்றால் என்ன? நாம் விளையாட்டை எவ்வாறு கருதுகிறோம் ? பணம் கொடுக்கும் ஒரு இயந்திரமாக நாம் கருதி வருகின்றோம். பணத்திற்காக விளையடுபவர்களே இன்றைய காலகட்டத்தில் அதிகமாக உள்ளனர் இந்நிலையில் நம் நாடு எப்படி ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வெல்லும்?

 சீனா போன்ற நாடுகளில் திறமைக்குத் தான் மதிப்பளிக்கிறார்கள். குழந்தைகளைப் பள்ளியிலேயே சென்று அவர்களின் திறமையை அறிந்து அவர்களின் திறமையை வளர்க்கிறார்கள். அதனால் அந்த நாடுகள் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கப்பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன.

 ஆனால் பழந்தமிழர் (ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், முதியவர்) பல்வேறு விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர். உடலையும் மனதையும் நலமாக வைத்திருந்தனர். விளையாட்டு என்பது பொழுது போக்க மட்டும் பயன்படுவதில்லை மாறாக உடலையும், மனதையும் நலம் பெறச் செய்வதாக கொண்டு அதை ஒரு நெறியாக மதித்து வந்தனர்.

பழந்தமிழர்கள் மரபு வழி வந்த விளையாட்டுக்கள் சில காண்போம் 


1.அசதியாடல்(இருபாலர்) நகைச்சுவையாகப் பேசி மகிழ்தல்.

2.அம்புலி அழைத்தல்(இருபாலர்) நிலாவை அழைத்து விளையாடுதல்.

3.அலவன் ஆட்டல்(இருபாலர்) நண்டைப் பிடித்து       விளைளயாடுதல்.

                   
 4.உலாவல்(இருபாலர்) இயற்கையான சூழலில் நடந்து செல்லுதல்.

 5.ஊசல்(இருபாலர்) மரத்தில் கயிறு கட்டி முன்னும் பின்னும் ஆடி விளையாடுதல்.

 6.எதிரொலி கேட்டல்(பெண்) மலைப்பகுதிகளில் ஒலி எழுப்பித் திரும்பிக் கேட்கும் ஒலி கேட்டு விளையாடுதல்.

7.எண்ணி விளையாடல்(இருபாலர்) ஒன்று,இரண்டு என்று மரத்தையோ,நாவயையே,விலங்குகளையோ எண்ணி பொழுது போக்காக ஆடுதல்.


8.ஏறுகோள்(ஆண்) மாடு பிடித்தல். இன்று ஏறுதழுவுதல், மஞ்சு விரட்டு,ஜல்லிக்கட்டு என அழைக்கப்படுகிறது. சங்க காலத்தில் வலிமையான மாட்டைப் அடக்குபவனையே பெண்கள் திருமணம் செய்து கொண்டனர்.

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" என்கிறது கலித்தொகை வலிமையான காளையை அடக்கிய ஆடவனையே சங்க காலமகளிர் திருமணம் செய்து கொண்டனர். அவ்வாறு காளையை அடக்க முடியாத ஆடவனை அடுத்த மறுபிறவியிலும் விரும்ப மாட்டேன் என்கிறாள் இந்தப் பெண்.

9.கண் புதைத்து விளையாடல்(பெண்) இன்று கண்ணாமூச்சி என்று இவ்விளையாட்டு அழைக்கப்படுகிறது

10.கவண்(பெண்) கிளைத்த கம்புகளில் வாரைக்கட்டி அதில் கல்லை வைத்து எறிந்து விளையாடுதல்.

11.கழங்கு(பெண்) சொட்டாங்கி என்று கிராமங்களில் இவ்விளையாட்டு அழைக்கப்படுகிறது.

 12.குதிரையேற்றமும், யானையேற்றமும்(ஆண்)
குதிரை, யானை ஆகியவற்றை அடக்குவதாகவும், தம் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதாகவும் இவ்விளையாட்டு அமைந்தது.

13.குரவை(பெண்) இது ஒரு வகையான கூத்து. பெண்கள் ஆடுவது மரபு.

14.சாம விளையாட்டு(ஆண்) இரவில் ஆண்கள் விளையாடும் விளையாட்டு.

15.குறும்பு விளையாட்டு (இருபாலர்) நகைச்சுவையாக விளையாடுவது.

16.சிறுசோறு(பெண்) பெண்கள் சோறு சமைப்பது போல விளையாடுவது.

17.சிறுதேர்(ஆண்) முக்காற்சிறு தேர் உருட்டி விளையாடுவது.

18.சிறுபறை(ஆண்) பறை என்பது தோலால் ஆன இசைக்கருவி. இதனை இசைத்து மகிழ்வது இவ்விளையாட்டாகும்.

19.சிற்றில் சிதைத்தல்.(ஆண்) பெண்கள் கட்டிய சிறு வீட்டை ஆண்கள் இடித்து விளையாடுவது.

20சுண்ண விளையாட்டு(பெண்) நறுமணம் வீசும் பல நிறப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாடுவது.
 
 21.சூது(இருபாலர்) ஏதாவது ஒரு பொருளை ஈடாக வைத்து விளையாடுவது.

22.செடி கொடி வளர்ப்பு(பெண்) சங்க கால மக்கள் இயற்கையோடு இயைபுற்று வாழ்ந்தார்கள். செடி கொடி வளர்ப்பதையே பெண்கள் ஒரு விளையாட்டாகச் செய்தனர்.

23.நீர் விளையாட்டு(இருபாலர்) நீரில் குதித்து விளையாடுதல், அங்கு வரும் நண்டுகளைப் பிடித்து விளையாடுதல்.

24.பந்து(இருபாலர்) பந்தினை வைத்து பல்வேறு விளையாட்டுகளை விளையாடினர்.

25.பறவைகளைக் காணுதலும் அவற்றைப் போலச் செய்தலும்(இருபாலர்)

 மொழியின் தோற்றக்கூறுகளுள் போலச் செய்தலும் ஒன்றாகும். சங்ககாலத்தில் பெண்கள் பறவைகளைக் கண்டு அவற்றின் ஒலியைப் போலச் செய்து மகிழ்ந்தனர்.
 
 26.பறவை வளர்ப்பும் விலங்கு வளர்ப்பும்(பெண்) பறவை, விலங்குகளை வளர்ப்பதை சங்க கால மகளிர் ஒரு விளையாட்டாகவே கொண்டிருந்தனர்.

27.பறவை விலங்குகளுடன் விளையாடுதல்(இருபாலர்) பறவை, விலங்குகளோடு விளையாடுவதை இருபாலரும் விளையாட்டாகக் கொண்டனர்.

28.பாவை விளையாட்டு(பெண்) பொம்மை போல செய்து விளையாடுவது.

29.பிசி நொடி விளையாட்டு(பெண்) விடுகதை கூறி விளையாடுவது.

30.மணற்குவியலில் மறைந்து விளையாடல்(பெண்)
பெரிய மணற்குவியல்களில் மறைந்து ஒருவரை ஒருவர் கண்டு விளையாடினர்.

 31.மலர் கொய்தலும் மாலை தொடுத்தலும்(பெண்)
பல விதமான மலர்களையும் கொய்து மாலையாக்கி மகிழ்ந்தனர்.

32.மல்(ஆண்) ஆடவர் இருவர் ஒருவரை ஒருவர் தம் வலிமையால் அடக்க முற்படுதல் இவ்விளையாட்டின் அடிப்படையாகும்.



33.வட்டு (ஆண்) வட்டமான இரும்பு போன்ற பொருளை எறிந்து விளையாடுதல்.

34.வள்ளை(பெண்) பெண்கள் கூடி பாடல் பாடி ஆடுவது இவ்விளையாட்டின் பண்பாகும்.

35.வில் விளையாட்டு(ஆண்) நரம்பால் செய்த வில்லை குறிவைத்து எறிந்து விளையாடுவது. வில்லில் இருந்து எழுந்த ஒலியே யாழ் என்னும் இசைக்கருவி தோன்றக் காரணமானது. யாழுள் வில்யாழ் என்னும் ஒரு யாழும் உண்டு.

 36.வேட்டை. (ஆண்) விலங்குகளை வேட்டையாடித் தம் வீரத்தை வெளிப்படுத்துவதாக இவ்விளையாட்டு அமைகிறது.




   பழந்தமிழரின் விளையாட்டுச் சுவடுகள் இன்றும் பல வடிவங்களில் உள்ளன. இவற்றைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள, சங்க இலக்கிய விளையாட்டுக் களஞ்சியம் என்னும் நூலைக் காணலாம்.

  மேலும் பழந்தமிழர் விளையட்டுக்கைளை பற்றி அறிய கீழ் உள்ள தொடுப்பை சொடுக்கிடவும்.

Tuesday, February 14, 2012

பழமொழிகள்

பழமொழி = பழமை+மொழி. பழமையான மொழி, நம் பண்டைய மக்கள் ஒரு பொருளை சுருக்கமாகவும், தெளிவாகவும், புறிதலுமாய் விளங்க பழமொழிகளை பேசி பயன்படுத்தி வந்தனர். பழமொழிகள் நம் மக்களின் அறிவுக்கூர்மையை வெளிப்படுத்துகிறது. பழமொழிகள் "ஒரு சமுதாயத்திலே நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருந்து வரும் அனுபவ குறிப்புகள்" என்று கூறுகின்றனர். இவை "நாட்டுப்புறவியலின்" ஒரு கூறாகவும் அமைகின்றன.

நாட்டுப்புறவியல் என்பது நாட்டுப்புற மக்களின் பழக்கவழக்கங்கள், பண்பாடு, நம்பிக்கைகள், இலக்கியங்கள், கதைகள், பழமொழிகள், வாய்மொழி வரலாறு, விடுகதைகள், வாய்மொழி பாடல்கள் போன்றவற்றை சேகரித்து, வகைப்படுத்தி, தொகுத்து, ஆராய்ந்து அவற்றை ஆவணப்படுத்தும் துறையாகும். இத்தகைய வழக்குகள் பற்றி நாட்டுப்புறவியல் அறிவியல் முறைப்படி ஆய்வு செய்கின்றது. 1846 ஆம் ஆண்டிலேயே நாட்டுப்புறவியல் பற்றித் தற்காலக் கருத்தமைவில் முறையான ஆய்வுகள் தொடங்கின. வில்லியம் ஜான் தாமஸ் என்பவரே இத்துறையில் முன்னோடியாவார்.

பழமொழிகளை  நினைவுக்கூர்வோம்:

* அறுக்க மாட்டாதவன் கையில் ஐம்பத்தெட்டு அறிவாள்.
* அழுத பிள்ளை தான் பால் குடிக்கும்.
* அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.
* அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள்.
* அப்பன் எவ்வழியோ பிள்ளை அவ்வழி.
* அடியாத மாடு படியாது.
* அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
* அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன.
* அறுக்க முடியாதவ இடுப்புல ஆயிறத்தெட்டு அறிவாள்.
* அவனே! அவனே! என்பதைவிடச் சிவனே! சிவனே! என்பது மேல்.
* அற்பனுக்கு வாழ்க்கை வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்.


* ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்.
* ஆடத் தெரியாதவள் மேடை பிழையென்றாளாம்.
* ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்.
* ஆடுற மாட்டை ஆடிக் கற, பாடுற மாட்டைப் பாடிக் கற.
* ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
* ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.
* ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
* ஆழம் தெரியாமல் காலை விடாதே.
* ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணா இரு.
* ஆறிலும் சாவு நூறிலும் சாவு.
* ஆசை காட்டி மோசம் செய்தல்.
* ஆக்கப் பொறுத்தது ஆறப் பொறுக்கவில்லை.
* ஆடு பகை குட்டி உறவு.
* ஆற்றிலே கரைத்தாலும் அளந்து கரை.

* ஆனைக்கும் அடிசறுக்கும்.
* ஆகாத பொண்டாட்டி கால் பாட்டாலும் குத்தம் கைப்பட்டாலும் குத்தம்.

* இக்கரைக்கு அக்கரை பச்சை.
* இருக்க இடம் கொடுத்தால் படுக்கப் பாய் கேட்பான்.
* இருதலைக் கொள்ளியின் ஓர் உயிர் போல.
* இரக்கமற்றவன் இதயம் இரும்பினும் கொடியது.
* இளமையில் கல்.
* இளங்கன்று பயமறியாது.
* இளமையில் கல்வி சிலை மேல் எழுத்து.
* இளமையில் கல். முதுமையில் காக்கும்.
* இன்பத்திற்குத் தேன்; அன்புக்கு மனைவி.
* இரவல் சேலையை நம்பி இடுப்புக் கந்தையை எறிந்தாளாம்.
* இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்.
* இதயம் ஏற்கிறது; தலை மறுக்கிறது.
* இன்று செய்யும் நன்மை நாளைய இன்பம்.
* இரவில் குறைந்த உணவு நீண்ட வாழ்வு.
* இருட்டுக்குடி வாழ்க்கை திருட்டுக்கு அடையாளம்.
* இறங்கு பொழுதில் மருந்து குடி.
* இந்த உலகில் மூன்று நண்பர்கள் துணிவு, புத்தி, நுண்ணறிவு.
* இறந்த சிங்கத்தைவிட உயிருள்ள சுண்டெலி மேல்.
* இன்று இலை அறுத்தவன் நாளை குலை அறுக்க மாட்டானா?
* இளமையில் நல்லறிவு முதுமையில் ஞானம்.
* இதயம் இருக்கும் இடம்தான் உன் வீடு.
* இன்பம் சிறகடித்துப் பறக்கும் பறவை.
* இலக்கியம் இல்லாத வாழ்வு சாவு.
* இன்பம் - துன்பம் மாறி மாறி வரும்.
* இளமையில் தெரியாது; முதுமையில் நினைவிருக்காது.
* இரவும் பகலும் யாருக்கும் காத்திராது.

* ஈகைக்கு எல்லை எதுவமே இல்லை.
* ஈயார் தேட்டை தீயார் கொள்வர்.
* ஈயான் தோட்ட வாழ இரண்டு குலை தள்ளும்.
* ஈட்டி எட்டிய வரையில் பாயும்.
* ஈகைக்கும் வெகுளித்தனம் உண்டு.


* உதைப்பானுக்கு வெளுப்பான் சலவைக்காரன்.
* உழுத நிலத்தில் பயிரிடு.
* உடனடி சிகிச்சையே நோய்க்கு மருந்து.
* உண்டு சுவை கண்டவன் ஊரைவிட்டப் போகமாட்டான்.
* உணவுக்கு நெருக்கம், நட்புக்குத் தூரம்.
* உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு.
* உப்பைத் தின்னவன் தண்ணீர் குடித்தாக வேண்டும்.
* உழுகிறவர்கள் கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது.
* உப்பில்லாப் பண்டம் குப்பையிலே.
* உப்பு அறியாதவன் துப்புக்கெட்டவன்.
* உனக்குத் தெரியாத தேவதையைவிட தெரிந்தபிசாசே மேல்.

* உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.

* உழைப்பால் விலகும் தீமைகள் மூன்று - துன்பம், தீயொழுக்கம், வறுமை.
* உழைத்து உண்பதே உணவு.
* உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.
* உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா?
* உப்பிட்டவரை உள்ளவும் நினை.
* உனக்குக் கொஞ்சம், எனக்கு கொஞ்சம், இதுதான் நட்பு.

* ஊருடன் பகைக்கின் வேறுடன் கெடும்.
* ஊசியைப் பார்த்து சல்லடை சொல்கிறது; உன்னுடைய வாயில் ஒரு                  ஓட்டை இருக்கிறது.
* ஊதுகிற சங்கை ஊதினாலும் விடிகிறபோதுதான் விடியும்.
* ஊத அறிந்தான் வாதி, உப்பு அறிந்தான் யோகி.
* ஊமை ஊரைக் கெடுக்கும்; பெருச்சாளி வீட்டைக் கெடுக்கும்.
* ஊரில் கல்யாணம்; மார்பில் சந்தனம்.
* ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.

* எரியும் கொள்ளிகளில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?
* எண்ணெய் குடித்த நாயை விட்டுவிட்டு, எதிர்க்க வந்த நாயை அடிச்சானாம்.
* எண்ணி எண்ணிச் சுட்டவனுக்கு ஒன்றுமில்லை. எட்டி எட்டிப் பார்த்தவனுகு எட்டுப் பணியாரம்.
* எல்லாப் புண்களுக்கும் காலம்தான் களிம்பு.
* எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.
* எட்டுத் திப்பிலி, ஈரைந்து சீரகம், சுட்டுத் தேனில் கலந்து கொடுக்க விட்டுப் போகுமே விக்கல்.
* எந்த விரலைக் கடித்தாலும் வலி இருக்கும்.
* எறும்புக்கு பனித் துளியே வெள்ளம்.
* எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் புத்திசாலியின் பார்வை இலக்கை நோக்கியே இருக்கும்.
* எப்படி வேண்டுமானாலும் சமையுங்கள்; ஆனால், அன்போடு பரிமாறுங்கள்.
* எளிதில் நம்புகிறவன் எளிதில் ஏமாற்றப்படுவான்.
* எலி வேட்டைக்குத் தவில் வேண்டுமா?
* எண்ணம்போல் வாழ்வு.
* எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்.
* எறும்பூரக் கல்லும் தேயும்.
* எட்டி பழுத்தென்ன? ஈயாதார் வாழ்ந்தென்ன?

* ஏழையின் பேச்சு அம்பலம் ஏறாது.
* ஏணியைச் செங்குத்தாக வைப்பவன் எளிதில் பின்பக்கம் விழுவான்.

* ஏழைக்கு ஒரு வியாதி; பணக்காரனுக்கு நூறு.
* ஏகாந்தம் என்பது இறைவனுக்கே பொருந்தும்.
* ஏழைக்கு ஒருபோதும் வாக்குக் கொடுக்காதே; பணக்காரனுக்கு ஒருபோதும் கடன் படாதே!
* ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது.

* ஐவருக்கும் தேவி அழியாத பத்தினி.
* ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

* ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்
* ஒளியத் தெரியாதவன் தலையாரி வீட்டில் நுழைந்தானாம்.
* ஒரு மிளகு ஒரு வண்டி வாழ்த்துக்குச் சமம்.
* ஒரு கையால் இறைத்து இரு கைகளால் வார வேண்டும்.
* ஒட்டகத்தின் மேல் உள்ளவனுக்கு முதுகு கூன் இல்லை.
* ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.
* ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
* ஒரு கை தட்டினால் ஓசை எழாது.
* ஒழுக்கம் விழுப்பம் தரும்.
* ஒவ்வொரு நாளையும் உனது சிறந்த நாளாய் எண்ணு.
* ஓரே குஞ்சு உள்ள கோழி ஓயாமல் கொக்கரிக்கும்.
* ஒத்தடம் அரை வைத்தியம்.
* ஒரு சொல் கோபத்தைக் கிளறுகிறது அல்லது அன்பைக் கிளறுகிறது.
* ஒருவர் பொறுமை இருவர் நட்பு.
* ஒரே குட்டையில் ஊறிய மட்டைபோல.

*  ஓட்டச் சட்டியினாலும் கொழுக்கட்டை வெந்தா சரி.
* ஓநாயிடம் அன்பு செலுத்தாதே! அது ஆட்டிற்குச் செய்யும் கேடு.
* ஓடைகளை நிரப்புவது மழைதான். பனித்துளிகள் அல்ல.
* ஓடிப் பழகிய கால் நிற்காது.
* ஓநாயுடன் நீ வசித்தால் ஊளையிடத்தான் வேண்டும்.


* கண்ணுக்கு இமை பகையா?
* கடுகு சிறுத்தாலும் காரம் போகாது.
* கண்டதே காட்சி, கொண்டதே கோலம்.
* கனமழை பெய்தாலும் கருங்கல் கரையுமா?
* கவலைகள் குறைந்தால் கனவுகள் குறையும்.கனவுகள் குறைந்தால் பேச்சுக்கள் குறையும்.பேச்சுக்கள் குறைந்தால் குற்றங்கள் குறையும்.
* கடவுளுக்கு பயந்து வாழ்க்கை நடத்து.
* கடுக்காய் நூறு தாய்க்குச் சமம்.
* கடுங்காற்று மழைக்கூட்டும்.கடுஞ்சிநேகம் பகை கூட்டும்.
* கண்ணீரை விட விரைவில் காய்வது எதுவும் இல்லை.
* கல்யாணம் பண்ணிப் பார். வீட்டைக் கட்டிப்பார்.
* கசிந்து வந்தவன் கண்ணைத் துடை.
* கஞ்சி கண்ட இடம் கைலாசம்; சோறு கண்ட இடம் சொர்க்கம்.
* கஞ்சித் தண்ணிக்குக் காற்றாய்ப் பறக்கிறான்.
* கஞ்சன் ஒற்றைக் கண்ணன்; பேராசைக்காரன் குருடன்.
* கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன்.
* கஞ்சி வார்க்க ஆள் இல்லை என்றாலும் கச்சை கட்ட ஆள் இருக்கிறது.
* கரி விற்ற பணம் கருப்பாய் இருக்குமா?
* கல்வி விரும்பு.
* கலைகளுக்கெல்லாம் அடிப்படை கலப்பை.
* கனவில் குடிக்கும் பாலை தகரக் குவளையில் குடித்தால் என்ன தங்கக்கோப்பையில் குடித்தாலென்ன?
* கணக்கு எழுதாதன் நிலைமை.கழுதை புரண்ட இடம் மாதிரி.
* கந்தையானாலும் கசக்கிக் கட்டு.
* கடன் இல்லாச் சோறு கவளமாயினும் போதும்.
* கடலில் கரைத்த பெருங்காயம் போல.
* கடல் தாண்ட மனமுண்டு; கால்வாயைத் தாண்ட மனமில்லை.
* கடல் திடலாகும்; திடல் கடலாகும்.
* கடல் நீர் இருந்தென்ன? காஞ்சிரை பழுத்தென்ன?
* கடல் மீனுக்கு நீந்தவா கற்றுத்தர வேண்டும்.
* கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணமாகியும் பிரம்மச்சாரி.
* கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்.
* கண்களை விற்றுச் சித்திரம் வாங்குதல் போல்.
* கரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமா?
* கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது போல.
* கழுதை அறியுமா கற்பூர வாசனை?


* காலம் போகும் வார்த்தை நிற்கும்.
* கால் அடிப்பட்ட நாயும், காது அறுந்த செருப்பும் கவைக்கு உதவாது.
* கால் இல்லாதவன் கடலைத் தாண்டுவானா?
* கார்த்திகை கன மழை.
* கார்த்திகை நண்டுக்கு கரண்டி நெய்.
* கார்த்திகை கண்டு களம் இடு.
* கார்த்திகைப் பிறையைக் கண்டவுடன் கைப்பிடி நாற்றைப் போட்டுக் கரை ஏறு.
* காணிச் சோம்பல் கோடி நட்டம்.
* காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல.
* காற்றுக்குச் சாய்கிற நாணல் தான் காலத்துக்கும் நிலைக்கும்.
* காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு.
* காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.
* காலிப் பெட்டிகளைப் பூட்ட வேண்டியதில்லை.
* காலைச் சுற்றிய பாம்பு கடியாமல் விடாது.
* காலடி வைக்கும்போதே நீரானால் கடலைத் தாண்டுவது எப்படி?
* காரியம் ஆகுமட்டும் காலைப்பிடி.
* கார்த்திகை கார் கடை விலை; தை சம்பா தலை விலை.
* கார்த்திகைப் பனியைப் பாராதே. கட்டி ஓட்டடா ஏர் மாட்டை.
* கார்த்திகை அகத்தி காம்பெல்லாம் நெய் வழியும்.

* காகம் திட்டி மாடு சாகாது.
* காய்த்த மரம்தான் கல்லடிபடும்.
* காவோலை விழக் குருத்தோலை சிரிப்பது போல்.

கிராமப்புறங்களில் பேச்சு வழக்கில் உள்ள பழமொழிகள்:

* பருவத்தே பயிர் செய்தல் வேண்டும்.
* விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு.
* மாமியார் உடைத்தால் மண்சட்டி; மருமகள் உடைத்தால் பொன்சட்டி.
* நல்ல மாடு உள்ளுரில் விலைபோகும்.
* பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாண்டானாம்.
* நித்தம் நித்தம் வந்தால் நெய்யும் புளிக்கும் பலநாளும் வந்தால் பாலும்  புளிக்கும்.
* கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்?
* குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு.
* குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுவது போல்.
* குரைக்கிற நாய் கடிக்காது.
* கெட்டாலும் செட்டி கிழிந்தாலும் பட்டு.
* கொல்லன் தெருவில் ஊசி விற்பதுபோல்.
* கோழி மிதித்துக் குஞ்சு சாகாது.
* கைப் புண்ணுக்குக் கண்ணாடி வேண்டாம்.
* சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போல.
* சிறு பிள்ளை வேளாண்மை விளைஞ்சும் வீடு வந்து சேராது.
* சுவரிருந்தால்தான் சித்திரம் வரையலாம்.
* தடியெடுத்தவன் தண்டக்காரன்.
* தம்பியுள்ளான் படைக்கஞ்சான்.
* தன் வினை தன்னைச் சுடும்.
* தனிமரம் தோப்பாகாது.
* தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு.
* தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை.
* தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன.
* நடுக்கடலுக்குப் போனாலும் நாய்க்கு நக்குத் தண்ணீர்தான்.
* நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல பெண்டாட்டிக்கு ஒரு வார்த்தை.
* நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்.
* நிறைகுடம் தளும்பாது.
* பசி வந்தால் பத்தும் பறந்திடும்.
* பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும்.
* பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.
* பனை மரத்தடியில் பால் குடித்தது போல.
* பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்.
* பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுவது போல்.
* புதுமைக்கு வண்ணான் கரைகட்டி வெழுப்பான்.
* புலி பசித்தாலும் புல்லுத் தின்னாது.
* பூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசும்.
* பொறுத்தார் அரசாள்வார் பொங்கினார் காடாள்வார்.
* போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.
* மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
* மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
* முடக் குதிரைக்குச் சறுக்கினது சாட்டு.
* முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும்.
* மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல்.
* யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.
* யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.
* விரலுக்குத் தக்கதே வீக்கம்.
* விளையும் பயிரை முளையிலே தெரியும்.
* வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.
* வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.
* வெளுத்ததெல்லாம் பாலல்ல.
* பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்.
* பூவிற்றகாசு மணக்குமா?
* பூனைக்கு கொண்டாட்டம், எலிக்குத் திண்டாட்டம்.
* பேராசை பெருநட்டம்.
* பூ மலர்ந்து கெட்டது வாய் விரிந்து கெட்டது
* வேலிக்கு ஓணான் சாட்சி.
* ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்.
* கணக்கறிந்த பிள்ளையிருந்தால் வீட்டில் வழக்குக்குக் குறைவில்லை.
* சாட்சிக்காரனின் காலில் விழுவதிலும் சண்டைக்காரனின் காலில்விழுவது மேல்.
* தினை விதைத்தவன் தினையறுப்பான் வினை விதைத்தவன் வினையறுப்பான்.
* சொல்லிக் கொடுத்த புத்தியும் கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாளுக்குக் கூட வரும்?
* பொருள் ஒரு பக்கம் போக பொல்லாப்பு ஒரு பக்கம் வரும்.
* பெட்டியிலே பூட்டினாலும் போட்ட விதி தப்பாது.
* தாயாக இருந்தாலும் பிள்ளையாக இருந்தாலும் வாயும் வயிறும் வேறு.

உவமையாக வரும் பழமொழிகள் 



*  கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட முடவன் போல.
* பார்த்தால் பசுப்போல், பாய்ந்தால் புலிபோல்.
* எருமை மாட்டில் மழை பெய்தது போல.
* தேன் எடுப்பவன் வீரல் சூப்புவது போல.
* குப்பைமேடு கோபுரமானது போல.
* குறைகுடம் கூத்தாடுவது போல."


இவை போன்று வரும் பழமொழிகள் உறவுகள் பற்றியும், உறவுகளால் வரும் துன்பங்கள் பற்றியும் கூறுவதாக அமைந்துள்ளன:


* நாற்றில் வளையாதது மரத்தில் வளையாது.
* நம்பினவனை நட்டாத்தில் விடுதல்.
* சாமிவரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க மாட்டான்.
* தன் முதுகு தனக்குத் தெரியாது.
* எலி வளையானாலும் தனிவளை வேண்டும்.
* வல்லவனையும் வழுக்கும் வழுக்குப் பாறை.
* குடிகாரன் பேச்சு பொழுது விடிஞ்சாப் போச்சு.
* கோடி கோடியா வாழ்ந்தாலும் இறுதியில் ஒரு கோடிதான் மிச்சம்.
* குவளையைக் கழுவினாலும் கவலையைக் கழுவ முடியாது.
* கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி.
* மடியில கனம் இருந்தால் தான் விழியல பயம்.
* சிறு துரும்பும் பல்குத்த உதவும்.
* வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுதல்.
* பணம் பாதாளம் வரையும் பாயும்.
* பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்.
* பேராசை பெரும் நட்டம்.
* முழு பூசணிக்காயை சோத்துல மறைத்தல்.
* தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு.
* கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம்.
* தலைவலியும் பல்வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்.
* தன் வினை தன்னைச் சுடும்.

* குனியக் குனியக் குட்டுவான், குனிந்தவன் நிமிர்ந்தால் குட்டினவன் ஓடுவான்.
* காஞ்சிபுரம் போனால் காலாட்டி சாப்பிடலாம்.
* விலை மோரில் வெண்ணெய் எடுப்பவன்.
* முடி சான்ற மன்னரும் முடிவில் பிடி சாம்பலாவர்.
* குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை.
* தாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை.
* தந்தை சொல்மிக்க மந்திரமில்லை.
* வரவு எட்டணா செலவு பத்தணா.
* கிட்டாதாயின் வெட்டென மற.
* சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரமும் முழங்கால் மட்டு.


             மேலே கண்ட பழமொழிகள் பல நம் புழக்கத்திலிருந்து மறைந்து விட்டன, அவற்றை நினைவுக்கூர்வோம்.

Sunday, February 12, 2012

தி டவர் ஆப் பாபேல்



வெள்ளப் பெருக்குக்குப் பிறகு முழு உலகமும் ஒரே மொழியைப் பேசியது. எல்லா ஜனங்களும் ஒரே விதமாகப் பேசினர்.

ஜனங்கள் கிழக்கே இருந்து பயணம் செய்து சிநேயார் நாட்டில் ஒரு சமவெளியைக் கண்டு அங்கே தங்கினர்.

நாம் செங்கற்களைச் செய்து. நெருப்பில் அவற்றைச் சுடுவோம். "அது பலமுடையதாகும்" என்றர். எனவே ஜனங்கள் கற்களைப் பயன்படுத்தாமல் செங்கற்களை பயன்படுத்தி வீடு கட்டீனர். சாந்துக்கு பதிலாக தாரைப் பயன்படுத்தினர்.




மேலும் ஐனங்கள், "நமக்காக நாம் ஒரு பெரிய கோபுரத்தை வானத்தை எட்டுமளவு கட்ட வேண்டும். நாம் புகழ் பெறுவோம். அது நம்மை ஒன்றுபடுத்தும். பூமி எ ங்கும் பரவிப் போகாமல் இருக்கலாம்" என்றனர்.

கர்த்தர் பூமிக்கு இறங்கி வந்து அவர்கள் நகரத்தையும் கோபுரத்தையும் கட்டுவதைப் பார்வையிட்டார்.

கர்த்தர், "இந்த ஐனங்கள் அனைவரும் ஒரே மொழியையே பேசுகின்றனர். இவர்கள் சேர்ந்து இவ்வேலையைச் செய்வதை நான் பார்க்கிறேன். இவர்களால் சாதிக்கக் கூடியவற்றின் துவக்கம்தான் இது. இனி இவர்கள் செய்யத்திட்டமிட்டுள்ள எதை வேண்டு மானாலும் செய்யமுடியும் .



எனவே, நாம் கீழே போய் அவர்களின் மொழியைக் குழப்பி விடுவோம். பிறகு அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள மாட்டார்கள்" என்று சொன்னார்.

அவ்வாறே கர்த்தர் ஐனங்களைப் பூமி முழுவதும் சிதறிப் போகும்படி செய்தார். அதனால் அவர்கள் அந்த நகரத்தைக் கட்டி முடிக்க முடியாமல் போயிற்று.

உலகமெங்கும் பேசிய ஒரே மொழியைக் கர்த்தர் குழப்பிவிட்டபடியால் அந்த இடத்தை பாபேல் என்று அழைத்தனர். கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியெங்கும் பரவிப் போகச்செய்தார்.


இவை இணையதளத்தில் இருந்து தொகுக்கப்பட்ட  "தி டவர்  ஆப் பாபேல் " கதை சுருக்கமாகும்.

Friday, February 10, 2012

குழந்தை தொழிலாளர்கள்


பத்து திங்கள் கருவறையில்
இருந்தேன்
ஒரு திங்கள் வகுப்பறையில் இருந்ததில்லை...







 பள்ளிக்கு போக பணம் இல்லை
 பட்டறைக்கு போக மனம் இல்லை








பூக்கள் சிந்தியது தேன்துளி
நாங்கள் சிந்தியது வியர்வைத்துளி...








 பட்டாம்பூச்சியாக பள்ளிக்குள்  அவர்கள்
 தீகுட்சிகலாக தீபெட்டிக்குள் நாங்கள்...










திரட்டுகளாக புத்தகங்கள் நிறைந்தது நூலகம் 
தீராத துன்பங்கள் நிறைந்தது எங்கள் வாழ்க்கை...








 இந்தியாவின் எதிர்காலமோ  நாங்கள்
 எங்களின் எதிர்காலமோ கேள்விக்குறி...






                நாங்கள் குழந்தை தொழிலாளர்கள் 
                பெயர் வைத்ததும், உருவாக்கியதும்
                நாங்கள் பிறந்த தாய் நாடு.......

Wednesday, February 8, 2012

பன்முக பண்பாடு


         

 பண்பாடுகளில் தலைமையாய் விளங்குவது தமிழனின் பண்பாடே ஆகும். ஆனால் நாம் இன்றும் பண்டைய பண்பாடுகளி பின்பற்றி வருகிறோமா ?  என்றால் இல்லை என்ற பதில் தான் நாம் அனைவரிடமும் இருந்து வரும். ஏனென்றால் நாம் நம் கலாச்சாரத்தை மாற்றி அமைத்துக்கொண்டோம். பிற நாடுகளின் கலாச்சாரத்தை பின்பற்றிக் கொண்டிருக்கிறோம்.

 வெளி நாடுகளில் இருந்து பல கலாச்சாரத்தை நாம் ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் அவை நம் கலாச்சாரத்தை சீர்குலைப்பதாக இருந்தால் அதை நாம் ஏற்றுக்கொள்ள கூடாது, ஆனால் அப்படி சில சீர்கேடுகளை உண்டாக்கும் பண்பாட்டை நாம் ஆதரித்து பின்பற்றி வருகின்றோம் இது முற்றிலும் தவறானது. நம் நாட்டின் பண்பாட்டை கண்டு வியந்து அதை பின்பற்றும் பிற நாடுகள் இன்றும் இருக்கின்றன, நாம் நம் பண்டைய பண்பாட்டை பின்பற்ற முன் வருவது இல்லை.


 வேப்பங்குட்சி, ஆலங்குட்சியில் பல் துலக்கிய நாம் இன்று துலக்கும் தூரிகையை கொண்டு துலக்குகிறோம், இதை கலாச்சார சீர்கேடு என்று சொல்ல முடியாது ஆனால் நாம் நம் கலாச்சாரத்தை மறந்துவிட்டோம் என்று ஆணித்தனமாக கூறலாம். அதற்காக தூரிகையை கொண்டு பல் துலக்க வேண்டாம் என்று சொல்ல வில்லை பன்முக பண்பாட்டை ஆதரியுங்கள் அதேபோல் நம் பண்பாட்டை மதியுங்கள்.

 இன்றைய தொழில்நுட்ப நிறுவணங்களில் ஆடை அணியும் முறை மிகவும் கீழ்தனமாகவும், கேவலமாகவும் இருக்கின்றது இதில் பெண்களே முக்கிய இடத்தை பிடிக்கிறார்கள். நம் நாட்டில் இருக்கும் வெளி நாட்டு நிறுவணங்களாக இருந்தாலும், நம் நாட்டு நிறுவணங்களாக இருந்தாலும் இதை கவனத்தில் கொண்டு ஒழுங்கு முறையான ஆடைகளை அணியும் நிலையை ஏற்படுத்த வேண்டும்.

 "பிறன் மனை நோக்காதே", என்று வள்ளுவன் பாடிச்சென்றான். ஆனால் நாம் இன்று அதற்கு மாறாக உள்ளோம். நம் நாட்டில் தற்போது சிறந்து விளங்கும் விஷயமாக இருப்பது "கள்ளக்காதல்". ஒருவனுக்கு ஒருத்தி என்பது நம் பண்பாடு, மற்ற நாடுகளில் அப்படி இல்லை. இந்நிலையில் இவ்வாறு நாம் நடந்துக்கொள்வது நம் கலாச்சாரத்தை முற்றிலுமாக சீர்குலைத்துவிட்டது.


 இது போன்று உணவு, உடை, மொழி, விருந்தோம்பல், இன்னும் பல விஷயங்களில் நாம் நம் பண்பாட்டை பாடுபடுத்திக் கொண்டிருக்கிறோம். பிற நாட்டு பண்பாடுகளை ஏற்று பின்பற்றுங்கள் ஆனால் அவை நம் பண்பாட்டை சீர்குலைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நம் பண்பாட்டை அழித்து விடாமல் பின்வரும் சந்ததிகள் அதை அறிந்து அவற்றை பின்பற்றுமாறு நாம் அவர்களை வழி நடத்த வேண்டும், அதற்க்கு முதலில் நாம் அவற்றை பின்பற்ற வேண்டும்.

 இன்று முதல் நாம் ஒரு உறுதி மொழி எடுத்துக்கொள்வோம் " நாம் நம் பண்பாட்டை, கலாச்சாரத்தை, நாகரிகத்தை சீர்குலைக்காமல் பாதுகாத்து பின்பற்றி அடுத்த தலைமுறையினரை அதன் வழியில் வழி நடத்தி நம் பண்பாட்டை தழைத்தோங்க செய்வோம்".

Sunday, February 5, 2012

பிழை

பிழையின்றி எழுத நினைத்தேன்
பிழை வந்தது
திருத்திக்கொண்டேன்

காதலின்றி வாழ நினைத்தேன்
காதல் வந்தது
திருத்த நினைத்தேன்

திரிந்தது உயிர் உடலை விட்டு ...


Wednesday, February 1, 2012

யார் இவன் ?

கட்டிடமாக நான் இருந்தால்
அதை தாங்கும் அடித்தளம் இவன்.

கடலாக நான் இருந்தால்
அதன் அழகிய அலைகள் இவன்.

கண்ணாடியாக நான் இருந்தால்
அதன் பிரதிபளிப்பு இவன்.

புத்தகமாக நான் இருந்தால்
அதன் பக்கங்கள் இவன்.

மின்விளக்காக நான் இருந்தால்
அதன் இழை இவன்.

தேன்கூடாக நான் இருந்தால்
அதை உருவாக்கும் தேனீ இவன்.

ரோஜாவாக நான் இருந்தால்
அதை காக்கும் முள் இவன்.

ஆலமரமாக நான் இருந்தால்
அதன் ஆணி வேர் இவன்.

இசையாக நான் இருந்தால்
அதை இனிமையாகும் சுவரங்கள் இவன்.

இரவாக நான் இருந்தால்
அதை குளிர்விக்கும் நிலவு இவன்.

பகலாக நான் இருந்தால்
அதை ஒளிர்விக்கும் சூரியன் இவன்.

யார் இவன் ?

யாராக இருப்பான் ?

என் உயிர் ?

இல்லை

அதற்கும் மேலானவன்

நான் என்று சொன்னால் என்னுள் அடங்குபவன்

என் நண்பன்...