Friday, January 20, 2012

பயம்

               உலகில் சுவாமி விவேகானந்தர் மிகவும் வெறுத்தது ஒன்று உண்டு என்றால், அது 'பயம்'தான்! ''பலமே வாழ்வு; பலவீனமே மரணம்'' என்று உரைத்த சுவாமி விவேகானந்தர், இதுகுறித்து ஒரு கதையும் சொல்லியிருக்கிறார்.

காட்டில் கலைமான் ஒன்று வசித்தது. ஒருநாள் அதன் குட்டி, ''உங்களது பெரிய கொம்பு மிக அழகாக இருக்கிறதே!'' என வியப்புடன் கேட்டது.

''ஆமாம்... இந்தப் பெரிய கொம்பு இருப்பதால்தான் சிங்கம், புலி போன்ற கொடிய மிருகங்களும் என்னைக் கண்டு பயந்து ஓடுகின்றன'' என்றது கலைமான். அப்போது, திடீரென சிங்கத்தின் கர்ஜனை வெகு தொலைவில் கேட்டது. கலவரம் அடைந்த கலைமான், ஓடி மறைந்தது! குட்டி மான், தந்தையைக் காணாமல் நின்றது. சற்று நேரம் கழித்து கலைமான் வந்தது. ஆனால் அதன் பயம் நீங்கவில்லை!

''பெரிய மிருகங்களையும் கொம்பை வைத்து பயமுறுத்துவேன் என்றீர்களே... இப்போது எங்கே போனீர்கள்?'' எனக் கேட்டது குட்டி மான்.

இதற்கு, ''ஹும்.. என்னமோ தெரியவில்லை... நான் தைரியசாலிதான். ஆனால், சிங்கத்தின் குரலைக் கேட்டதும் பயந்து ஓடிவிடுகிறேன்'' என்றதாம் கலைமான்!

வீறாப்பாகப் பேசும் நம்மில் பலரது நிலைமையும் இப்படித்தான். சிக்கலான நேரங்களில் நமது இயல்பே பயப்படுவதுதான். இதற்கு சரியான மருந்து... 'பயமில்லை... பயமில்லை என்று எப்போதும் முழங்கு; 'பயம் கொள்ளாதே' என எல்லாரிடமும் சொல். பயமே மரணம், பயமே பாவம், பயமே நரகம்' என அறிவுறுத்தினார் விவேகானந்தர். 'மனிதன், ஓர் உண்மையில் இருந்து மற்றொரு உண்மைக்குப் போகிறான்' என்றார் சுவாமிஜி. ஆனால், 'மனிதன் ஒரு பயத்திலிருந்து மற்றொரு பயத்துக்கு போகிறான்' என்பதே இன்றைய நிலைமை!
இளங்கன்று பயம் அறியாது என்பர். இன்றோ, பிஞ்சு உள்ளங்களிலும் பயத்தை விதைத்து விட்டோம்.

படிக்கும்போது தேர்வு பயம்; பின்னர் தேர்வுகளில் தேறுவோமா என்ற பயம்; தேறியதும், உயர் கல்விக்கு இடம் கிடைக்குமா..? கிடைத்ததும், முடிப்போமா..? முடித்ததும், வேலை கிடைக்குமா..? வேலை கிடைத்ததும், சம்பளம், பதவி உயர்வு கிடைக்குமா..? பின்னர் நல்ல துணை அமையுமா..? அமைந்ததும், குழந்தை பிறக்குமா..? பிறந்ததும், எல்கேஜி அட்மிஷன் கிடைக்குமா..? கிடைத்ததும், வாரிசு நல்லபடி வளருமா..? இப்படி பயத்தில் தொடங்கி, பயத்திலேயே உழன்று, பயத்திலேயே தொடரும்படி வாழ்க்கைச் சக்கரத்தை நகர்த்திக் கொண்டிருக்கிறோம். உண்மையான பயத்தைவிட, கற்பனை பயத்திலேயே நாட்களை அதிகம் கழிக்கின்றனர்!
பயத்தை எப்படி வெல்வது? பயம் யாருக்கு வரும்? தன்னம்பிக்கை குறைவாக உள்ளவர்க்கே பயம் வரும்.

'இவனை நம்பு அல்லது அவனை நம்பு என்கிறார்கள். ஆனால் நான் கூறுகிறேன்... முதலில் உன்னிடமே நீ நம்பிக்கை வை. எல்லா ஆற்றல்களும் உனக்குள்ளேயே உள்ளன' என்றார் சுவாமிஜி. இளைஞன் என்பதற்கு சுவாமிஜி சொல்லும் இலக்கணம் என்ன தெரியுமா? 'பயமற்றவனே இளைஞன்!'


             2005 ஆம் ஆண்டு அமெரிக்காவில் 13 - 15 வயதுள்ள இளம் வயதினரிடம் கணக்கெடுத்ததில் அவர்கள் எதன் மீது, எத்தகைய பயம் கொள்கிறார்கள் என்று ஆராயப்பட்டது. அதில் முக்கியமாக கருதப்பட்ட சிறந்த 10 வகையான பயங்கள் வரிசைப்படுத்தப்பட்டன.
1. தீவிரவாதத் தாக்குதல்கள், 2.சிலந்திகள், 3. இறப்பு, 4. முயற்சியில் தோல்வி, 5. போர், 6. உயரங்கள், 7. குற்றவாளி/குழு வன்முறை, 8. தனிமை, 9. வருங்காலம் பற்றிய கவலை, 10. அணு ஆயுதப் போர் ஆகியவைகளாகும்.

அளவற்ற பயங்கள் இருந்தபோதிலும், சிலருக்கு கேள்விப்படாத சில பயங்களும் ஏற்படுவதுண்டு.

அந்த அபூர்வமான 10 வகையான பயங்கள்.
1. புல்லாங்குழலைப் பார்க்க, இசையைக் கேட்க பயம் - ஆலொ ஃபோபியா
2. சாக்லெட் போன்ற பொருட்கள் வாயின் உட்புறம் மேலன்னத்தில் ஒட்டிக் கொள்வதால் பயம் - அரக்கி புடிரோ ஃபோபியா
3.முழங்கால்களைப் பார்க்க, நினைக்க பயம் - ஜெனு ஃபோபியா
4. நீளமான சொற்களுக்கு பயம் - (Hippo) கிப்போ பொடோ மான்ச்ட் ரஸ் ஸ்ஃயுப்ட் அலிஓ ஃபோபியா
5. நூல் மற்றும் நூல்கண்டைப் பார்த்து பயம் - லினனோ ஃபோபியா
6. பாடல்களைப் பார்க்க, படிக்க பயம் - மெட் ரோ ஃபோபியா
7. ஷெல் மீன் களைப் கண்டால் பயம் - ஆஸ்ட் ரா கோனோ ஃபோபியா
8. மஞ்சள் நிறத்தைக் காண பயம் - ஃசாந்தோ ஃபோபியா
9. சிரிக்க பயம் - ஜீலியோ ஃபோபியா
10. பயம் என்று நினைத்தால் பயம் - ப்போபோ ஃபோபியா

2 comments:

  1. Gud Try.........
    Ofcourse this is needed to all individuals.........

    ReplyDelete
  2. Bayapaduravangaluku oru nalla karuthu......................
    Bayathai vendru kattuvom................

    ReplyDelete